கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுவிப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நேற்று விடுவிக்கப்பட்டார். கேரளாவின் திருவனந்தபுரம் மகளிர் சிறையிலிருந்து அவரது தாயார் பிரபா சுரேஷ் அவரை அழைத்து வந்தார். படம்: பிடிஐ
தங்கக் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நேற்று விடுவிக்கப்பட்டார். கேரளாவின் திருவனந்தபுரம் மகளிர் சிறையிலிருந்து அவரது தாயார் பிரபா சுரேஷ் அவரை அழைத்து வந்தார். படம்: பிடிஐ
Updated on
1 min read

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு ஆமீரக தூதரத்தின் பெயரில் கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி கைப்பற்றினர். வெளிநாட்டுத் தூதரக வழியில் கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் இதன் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

எனவே சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறையுடன் தேசிய புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி கைது செய்தனர். அப்போது முதல் அவர் நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் என்ஐஏ பதிவு செய்த வழக்கில் மட்டும் அவர் ஜாமீன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் என்ஐஏ வழக்கில் ஸ்வப்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி ஜாமீன் வழங்கியது. ரூ.25 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு 2 பேரின் உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in