Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது - 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் : மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுடெல்லி

இருசக்கர வாகன பயணத்தில், 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில்உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன. இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர் களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வரைவு விதிகளை மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் வரையறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

மோட்டார் வாகன சட்டப் பிரிவு 129-ல்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம், இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

நான்கு வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது, ஓட்டுநர் உடன் குழந்தையை இணைக்கும் வகையில் பெல்ட் அணிவிக்க வேண்டும். இந்த பெல்ட் இந்திய தர கட்டுப்பாட்டுஅமைப்பின் (பிஐஎஸ்) தர நிர்ணயத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். இணைப்பு பெல்ட் எடை குறைவாகவும், நீளத்தை கூட்டி, குறைக்கஏதுவாகவும், நீர்புகா தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும். 30 கிலோ எடையை தாங்க வேண்டும். இணைப்பு பெல்ட்தரமான நைலானில் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுநர், குழந்தைக்கு நடுவே இணைப்பு பெல்ட்டில் பஞ்சு பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இருசக்கர வாகனத்துக்கு பின்னால் அமர்ந்திருக்கும் 9 மாதம் முதல்4 வயது வரையிலான குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இதற்குஓட்டுநரே பொறுப்பேற்க வேண்டும். பிஐஎஸ்தரத்துடன்கூடிய ஹெல்மெட்டை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. இந்த வரைவு விதிகள் தொடர்பான ஆட்சேபங்கள், ஆலோசனைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளருக்கு கடிதம் வாயிலாக அனுப்பலாம். comments-morth@gov.in என்றமின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘4 வயது வரையிலானகுழந்தைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இருசக்கர வாகன ஓட்டுநரையும் குழந்தையையும் இணைக்கும் வகையில் பெல்ட் அணிவிக்க வேண்டும். 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும். மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது‘‘ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘2019-ம் ஆண்டுநேரிட்ட விபத்துகளில் 11,168 குழந்தைகள்உயிரிழந்தன. அதாவது நாடு முழுவதும்ஒவ்வொரு நாளும் 31 குழந்தைகள் விபத்தில் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும்’’ என்று தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x