

அந்தமானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று சுபாஷ் சந்திர போஸ் தீவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்கு மிகப் பெரியது. ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அந்தமானின் ரோஸ் தீவுக்கு நேதாஜி பெயரை சூட்டினார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள்.
நேதாஜி போன்று பல்வேறு சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகழ் மறைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. அந்தமானின் செல்லுலார் சிறையில் வீர சாவர்க்கர் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். ஆனாலும் அவர் கடைசிவரை தனது தைரியத்தை இழக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.