பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

9.5 கிலோ தங்கம்; ரூ 100 கோடி பணம் : காஞ்சிபுரம், சென்னை, வேலூரில் வருமான வரித்துறை சோதனை

Published on

காஞ்சிபுரம், சென்னை, வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 9.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ 100 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருவாய் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

காஞ்சிபுரத்தை சேர்ந்த சீட்டு மற்றும் நிதி நிறுவனம், பட்டு சேலை மற்றும் இதர ஆடைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. காஞ்சிபுரம், சென்னை மற்றும் வேலூரில் உள்ள 34 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சீட்டு நிறுவனத்தை பொறுத்தவரை, அனுமதியில்லாமல் தொழில் நடத்தி வந்ததும், கடந்த சில வருடங்களில் ரூ 400 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ரொக்க பணத்தின் வாயிலாக நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

கமிஷன் மற்றும் டிவிடெண்ட் உள்ளிட்டவற்றின் மூலம் கணக்கில் வராத பணத்தை அக்குழுமம் ஈட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எண்ணற்ற பிராமண பத்திரங்கள், பின் தேதியிட்ட காசோலைகள், கடன்களுக்கு ஈடாக வழங்கப்பட்ட சொத்து அதிகார பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நிதி கடன் மூலம் அதிகளவில் வட்டி ஈட்டியிருப்பதும், கணக்கில் வராத முதலீடுகள் மற்றும் செலவுகள் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கில் வராத பணம் ரூ 44 லட்சம் மற்றும் 9.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ 100 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருவாய் கண்டறியப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in