திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களின் குற்றப்பின்னணி குறித்து காரசார வாக்குவாதம்

திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களின் குற்றப்பின்னணி குறித்து காரசார வாக்குவாதம்
Updated on
1 min read

திருப்பதி அறங்காவலர் குழுவில் அதிகபட்சமாக 81 பேர் உறுப்பினர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் அரசு நியமனம் செய்ததை எதிர்த்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், 51 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இதுவரை யாரும் பதவி பொறுப்பு ஏற்கவில்லை.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மனுதாரரும் எதிர்தரப்பு வழக்கறிஞருமான அஸ்வினி குமார் கூறும்போது, ‘‘தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக உள்ள 24 பேரில், 14 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாவர். மேலும் 4 பேர் அரசியல் ரீதியில் காய் நகர்த்தி, உறுப்பினர்களாகி உள்ளனர். ஆதலால் இந்த 18 பேருக்கும் உறுப்பினர்களாக நீடிக்க எவ்வித தகுதியும் கிடையாது’’ என வாதிட்டார். மேலும், இவ்வழக்கில் இந்த 18 பேரை பிரதிவாதிகளாக சேர்க்க நீதி மன்றம் அனுமதிக்க வேண்டுமென கோரினார். அப்போது, தேவஸ்தான வழக்கறிஞருக்கும், எதிர்தரப்பு வழக்கறிஞர் அஸ்வினி குமாருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பின்னர் இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அந்த 18 பேரையும் பிரதிவாதிகளாக சேர்க்க ஒப்புக்கொண்டது.

இது தொடர்பான நோட்டீஸை தேவஸ்தானத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது. தசரா விடுமுறைக்கு பின்னர் இவ்வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in