மக்களின் வாழ்வுரிமையில் தலையிடாதீர்கள்- பட்டாசு உற்பத்தியாளர்களிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆத்மராம் நத்கர்னி, "பட்டாசுஉற்பத்தி துறை மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பட்டாசு தடை, கட்டுப்பாடுகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது" என்றார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பார்தி ஆஜராகி வாதாடினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
வேலைவாய்ப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையில் தலையிடக்கூடாது. எங்களைப் பொறுத்தவரை அப்பாவி மக்களின் வாழ்வுரிமைக்கு முதலிடம் அளிக்கிறோம். பசுமை பட்டாசுகளை சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஏற்றுக் கொண்டால் அது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிப்போம்.
நமது நாட்டை பொறுத்தவரை சட்டங்கள், உத்தரவுகள் முறையாக அமல் செய்யப்படுவது கிடையாது. மத நிகழ்ச்சிகள், அரசியல்,தேர்தல் வெற்றி கொண்டாட்டங் களில் உச்ச நீதிமன்ற உத்தரவைமீறி பட்டாசுகள் வெடிக்கப்படு கிறது. இதை காவல் துறை அதிகாரிகள் தடுப்பது இல்லை.
இவ்வாறு செயல்படும் காவல் அதிகாரிகளை பொறுப்பாளி களாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். - பிடிஐ
