வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்; டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பாஜக ஆளாத மாநிலங்கள் பந்த்துக்கு ஆதரவு

பாரத் பந்த்தால் டெல்லி குர்கான் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காட்சி | படம்: ஏஎன்ஐ.
பாரத் பந்த்தால் டெல்லி குர்கான் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காட்சி | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓராண்டு நிறைவை ஒட்டியும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நடத்தும் இந்த பாரத் பந்த்துக்கு பாஜக ஆளாத மற்ற மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா சார்பில் நடத்தப்படும் இந்த பந்த்தால் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளதால், அங்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாரத் பந்த் நடக்கும்போது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள் மூடப்படும். பொது நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்திருந்தது.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சில நகரங்களில் மட்டும் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லி உ.பி. மாநிலத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளிலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேசமயம், அவசரப் பணிகள், அத்தியாவசிய சேவைகள், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், மீட்புப் பணி, நிவாரணப் பணிகள், தனிப்பட்ட அவசரப் பணிகளுக்குத் தடையில்லை என்றும் விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் விவசாயிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்த காட்சி
பஞ்சாப்பில் விவசாயிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்த காட்சி

இந்த பாரத் பந்த்துக்கு நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 15 வர்த்தக அமைப்புகள், அரசியல் கட்சிகள், 6 மாநில அரசுகள், சமூகத்தின் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், அனைத்து இந்திய ஃபார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஸ்வராஜ் இந்தியா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வழக்கறிஞர்கள் சார்பில் பல்வேறு பார் கவுன்சில் அமைப்புகளும், யூனியன்களும் விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in