கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்தனர்: 191 நாட்களில் இல்லாத வகையில் குறைவு

Published on

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 191 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து 3 லட்சத்துக்கும் கீழ் சரிந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 26 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 78 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 99 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.89 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்து 972 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.78 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,586 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர். கடந்த 92 நாட்களாக தினசரி தொற்றில் 50 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 276 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 47 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை ஏறக்குறைய 56.44 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 86.01 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in