

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் 100 சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தியை பெருக்குவது இலக்காக கொண்டு அதற்கா நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையத்தில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் 100 சதவீத மின் ஆற்றல் தேவை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மூலம் தினமும் 6,000 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், இந்த ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம், நிர்வாக அலுலகம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.