

ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி காலமானார். அவருக்கு வயது 92.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி. சையது அலி ஷா கிலானி 1972, 1977, 1987 ஆகிய ஆண்டுகளில் காஷ்மீர் எம்எல்ஏவாக பதவி வகித்தார். பின்னர் தீவிர பிரிவினைவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டு காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரி போராடினார்.
இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தார். இதனால் தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவர் நேற்று காலமானார். கிலானி மறைவுக்கு காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘கிலானியின் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. பல விஷயங்களில் எங்களுக்கிடையே உடன்பாடு ஏற்படாமல் இருந்திருக்கிலாம்.
ஆனால் அவரது கொள்கை உறுதி மற்றும் தன்னம்பிக்கை பாராட்டத் தக்கது. அதற்காக நான் அவரை மதிக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் வழங்கட்டும்’’ எனக் கூறியுள்ளார்.