வரலாற்றில் முதன்முறை; உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

வரலாற்றில் முதன்முறை; உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை. இந்த 9 பேரில் 8 பேர் நீதிபதிகள் ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.

பட்டியலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து 9 நீதிபதிகளுக்கும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர். 9 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்த நியமனத்தின் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி.நாகரத்தனா, பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார் என கருதப்படுகிறது.

இதில் ஒருவரான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு வரும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in