ரூ.100 லட்சம் கோடியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் : பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசிய காட்சி | படம் ஏஎன்ஐ
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசிய காட்சி | படம் ஏஎன்ஐ
Updated on
2 min read


இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் முழுமையான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திரன விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி டெல்லிசெங்கோட்டையில் வந்து தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்துபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக் கூறி பேசியதாவது:

நாட்டின் முழுமையான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடியில் விரைவி்ல் பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில்போட்டியிட முடியும், எதிர்கால பொருளாதார மண்டலங்களையும் உருவாக்க முடியும்.

இந்தியா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 800 கோடி டாலர் அளவுக்கு செல்போன்களை இறக்குமதி செய்தது, ஆனால், தற்போது 300 கோடி டாலர் அளவுக்கு செல்போன்களை ஏற்றுமதி செய்கிறது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், உள்கட்டமைப்புக்காக முழுமையான அணுகுமுறைஇந்தியாவுக்கு அவசியம்.

உலகத் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்த நாட்டின் பெருமையாக கருதப்படும் 80 சதவீதம் வரை இருக்கும் 2 ஹெக்டேருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறு விவசாயிகள் மீது அரசு அதிக அக்கறை கொள்கிறது. அரிசி வழங்கும் எந்தஒரு திட்டமும் 2024ம் ஆண்டுக்குள் பலப்படுத்தப்படும். நம்முடைய கிராமங்களை வேகமாக மாற்றி வருகிறோம். டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் கிராமங்களிலும் உருவாகிவிட்டனர்.

75-வது சுதந்திரன விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 75 வந்தே பாரத் ரயில்கள் சேவையை விரிவுபடுத்தப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். மியான்மர், வங்கதேசம், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து கிடைக்க வழி செய்யப்படும்.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்ன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவினர் ஆகியோருக்கான ஒதுக்கீடு வழங்கப்படும்.

கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மக்களுக்கு இடையிலான இடைவெளி்க்கு பாலம் அமைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், 4.5 கோடிக்கும் அதிகமான புதிய வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இ்வ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in