

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது, அதேநேரம், உயிரிழப்பு மட்டும் குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
'கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 40 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 227 ஆகக் குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 2ஆயிரத்து 760 பேர் குறைந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இப்போதுதான் குறைந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் 97.46 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் இதுதான் அதிகபட்சமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 585 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 30 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 208 பேரும், கேரளாவில் 160 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 48 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரத்து 779 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. வியாழக்கிழமை மட்டும் 19 லட்சத்து 70ஆயிரத்து 495 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 53 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.