வெங்கய்ய நாயுடுவுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். படம்: பிடிஐ
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி இம்மாதம் 14-ம்தேதி வரை (இன்று) நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் நேற்று முன்தினம் தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

இதனிடையே, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் காப்பீட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவைத் தலைவர் மேஜையின் முன்பு கூடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மிகவும் கவலையுடன் பேசினார்.

இந்நிலையில், வெங்கய்ய நாயுடுவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், நேற்று முன்தினம் அவையில் நடந்த விஷயங்கள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், நாடாளுமன்ற விதிமுறைகளை அரசு பின்பற்றுவதில்லை என்றும், சட்டத்திட்டங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியதாக தெரிகிறது. சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in