மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: விவாதமின்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி | படம்: ஏஎன்ஐ.
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

மக்களவையில் எதிர்க்கட்சிகள் செய்த கடும் அமளி, குழப்பத்துக்கு இடையே விவாதமின்றி 3 மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு திருத்த மசோதா, வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழக திருத்த மசோதா, பழங்குடியினருக்கான அரசியலமைப்பு உத்தரவு திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

மக்களவை இன்று காலை கூடியதும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து அவையை இரு முறை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

அதன்பின் நண்பகல் 12.30 மணிக்கு அவை கூடியவுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு திருத்த மசோதாவை அவையில் அறிமுகம் செய்தார்.

மசோதாவை அறிமுகம் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இது மிகவும் முக்கியமான மசோதா. தொழில், வர்த்தகம் செய்வதை சிறு மற்றும் பெரிய வர்த்தகர்களிடையே மிகவும் எளிதாக்கும். இந்தச் சட்டத்தில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

ஆனால், நிர்மலா சீதாராமனைப் பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலுக்கிடையே அடுத்த மசோதாவான வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழக திருத்த மசோதாவை நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

இது, வங்கியில் இருக்கும் வைப்புத்தொகைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்க வகை செய்யும் மசோதாவாகும். இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார். ஆனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் பெரும் அமளி நிலவியது. இதனால் இரு மசோதாக்களும் எந்தவிதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார்.

மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா பழங்குடியினருக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவை அறிமுகம் செய்தபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டதால், இந்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து, மக்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார். இன்று காலையில் அவை தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 4-வது முறையாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in