

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, அங்கு ராமா் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது ராமர் கோயிலின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள்விரைவில் முடியும் நிலையில் உள்ளது. கோயில் தளத்தில் இரண்டாவதுகட்ட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்சேவக்புரத்தில் உள்ளகற்களில் குறைந்தபட்சம் 70 சதவீதம் கோயிலின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும். கட்டுமானத்தில் ஸ்டீல் அல்லது செங்கற்கள் பயன்படுத்தப்படாது என்று இதன்கட்டுமானப் பணியை நிர்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் நீண்ட ஆயுளை உறுதி செய்ய அதிக எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் நவீன மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கோயிலின் கர்ப்பக்கிரகம் உட்பட 2025-ம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையும். எனினும், அதற்கு முன்னதாகவே வரும் 2023 டிசம்பருக்குள் ராமர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.