இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது: நிர்மலா சீதாராமனிடம் மனு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது: நிர்மலா சீதாராமனிடம் மனு
Updated on
1 min read

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை (ஐஓபி) தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வங்கியில் தொழிற்சங்கம் சார்பில் இதுதொடர்பாக இன்று மனு அளிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சமர்ப்பித்திருந்தார். இதில், இரண்டு தேசிய வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த இரண்டு வங்கிகள் எவை எனப் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும், அந்த இரண்டில் ஒன்றாக ஐஓபியும் இடம் பெற்றிருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதற்காக ஐஓபியின் தொழிற்சங்கம் சார்பில் தனியார்மயமாக்கலை தடுக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தவகையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனும் ஐஓபி தொழிற்சங்கம் சார்பில் சந்திப்பு நடந்தது.

டெல்லியின் மத்திய நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஐஓபியின் தொழிற்சங்கத் தலைவர் இரா.முகுந்தன் கலந்து கொண்டார். அவர் ஐஓபி தொழிற்சங்கம் சார்பில் அமைச்சர் நிர்மலாவிடம் ஒரு மனு அளித்தார்.

அதில், ஐஓபியை எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் முன்னாள் எம்.பியுமான இல.கணேசனுன் உடன் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in