

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ அறிவித்து உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பாபுல் சுப்ரியோ. கவிஞர், பாடகராக இருந்த அவர் 2014-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மத்திய அமைச்சரானார். அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த மே மாதம் நடந்த முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு பாபுல் சுப்ரியோ பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அமைதியாகவே இருந்து வந்தார்.
அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது பாபுல் சுப்ரியோ பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த வேறு சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் அவர் முகுல் ராயை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பாபுல் சுப்ரியோ அறிவித்து உள்ளார். இதுகுறித்த அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘விடை பெறுகிறேன். நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை. திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எந்த கட்சிகளும் என்னை அழைக்கவில்லை. நான் எங்கும் செல்லவில்லை.
சமூக பணியில் ஈடுபடுவதற்கு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்துவிடுவேன். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வேன்''
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.