

இந்தியாவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் தொடர்ந்து 4-வது நாளாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 593 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,765 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.29 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரத்து 263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.37 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 593 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 23 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 231 பேரும், கேரளாவில் 116 பேரும், ஒடிசாவில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 76 ஆயிரத்து 315 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 46 கோடியே 64 லட்சத்து 27ஆயிரத்து 38 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 46.15 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.