

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை அறிவித்துள்ள பிரதமர் மோடி இது நாட்டில் சமூக நீதியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு கல்வியாண்டில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவர். முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை, முதுகலை மருத்துவ/ பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டா பிரிவில் 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எங்கள்அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இது ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மகத்தான உதவியாக அமையும்.
அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதுடன் நமது நாட்டில் சமூக நீதியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.