

இந்தியாவில் கரோனா தொற்று கடந்த 4 மாதங்களுக்குப் பின் நேற்று முன்தினம் 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்திருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 654 ஆக திடீரென அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றின் அளவில் 50 சதவீதத்துக்கும் மேல் கேரளா, மகாராஷ்டிராவில்தான் இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் மட்டும் 22 ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
120 நாட்களுக்குப் பின் கரோனா தினசரி தொற்று நேற்று முன்தினம் 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதைவிட 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 43 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் அதிகரித்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.27 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.39 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 640 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 22 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 254 பேரும், கேரளாவில் 156 பேரும், ஒடிசாவில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 36 ஆயிரத்து 857 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 46 கோடியே 9 லட்சத்து 978 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 44.61 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.