

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ்கள் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில் “ உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆனால், எப்போது வழங்கப்படும் என்பது குறி்த்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, நிதிஆயோக்கின் சுகதாார உறுப்பினர் வி.கே. பால் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில் “ மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. அந்த நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ அவசரகால பயன்பாட்டுக்காக இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதியளித்துள்ளது” எனத் தெரிவித்தது. ஆனால், ஃபைஸர் நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக எந்த விண்ணப்பமும் இந்திய அரசிடம் அளிக்கவில்லை.