குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் பவார்?- தேசியவாத காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் பவார்?- தேசியவாத காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு
Updated on
2 min read

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்துவது தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதுபற்றி வெளியான செய்தி ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சார வியூகம் அமைத்தார் பிரஷாந்த் கிஷோர்.

ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.

மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். பின்னர் சரத் பவார் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்றன. கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

இதனிடையே சரத் பவாரை அடுத்த குடியரசுத் தலைவராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானது. ஆனால் சரத்பவார் இதனை மறுத்தார்.

‘‘குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்று என்னை சொல்வது தவறு. ஒரு கட்சியில் 300 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருக்கும்போது தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்’’ எனக் கூறினார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் இதுபற்றி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவார் முன்னிறுத்தப்படுவதாக வெளியான தகவல் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது. குடியரசுத் தலைவர் தேர்தல் தற்போது நடைபெறப்போவதில்லை. அதற்கு காலம் உள்ளது. 5 மாநில தேர்தல்கள் தான் தற்போது நடைபெறுகிறது.

தேசிய அளவில் நிலைமை பற்றி அதன் பிறகே பேச முடியும். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்துவது தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதுபற்றி வெளியான செய்தி ஜோடிக்கப்பட்ட ஒன்று. இதில் துளியும் உண்மையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in