

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப் பட உள்ளன. வரும் 12-ம்தேதி முதல், அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.
அமராவதியில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெகன் பேசியதாவது:
ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள், தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். வரும் 12-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வி திட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்துவோம். இதன் மூலம் எந்த ஒரு பள்ளியும் மூடப்படாது.
இன்டர்மீடியட் (பிளஸ்-2)மாணவ, மாணவியருக்கு, அவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இன்டர்மீடியட் முதலாம்ஆண்டில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 70 சதவீத மதிப்பெண்களையும் இணைத்து, இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு சான்றிதழ் தயாரிக்கப்படும். விரைவில் இதன் சான்றிதழ் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.