

பாஜக ஆட்சியில் நாடு பின்தங்கிவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ள லாலு பிரசாத், டெல்லியில் தங்கியுள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களிடம் காணொலிக் காட்சி மூலம் அவர் பேசினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற லாலு பிரசாத் பேசியதாவது:
பாஜக ஆட்சியில் நாடு மிகவும் பின்தங்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரமும் மக்களிடையே நல்லிணக்கமும் சீர்குலைந்து விட்டன. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. அயோத்திக்கு பிறகு மதுராவிலும் கோயிலை மீட்க வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு என்ன அர்த்தம்? இந்த நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது?
கரோனாவை விட அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் மக்களின் முதுகெலும்பை முறிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. மக்களின் வறுமை அதிகரிப்பது நாட்டுக்கு நல்லதல்ல. பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் ஊழல் அதிகரித்துவிட்டது. விரைவில் பிஹாருக்கு வருவேன். எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்திப்பேன்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் பேசினார்.