கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வங்கிகள் லாபம் ரூ.1 லட்சம் கோடி
கடந்த 2020-21 நிதி ஆண்டில் இந்திய வங்கித்துறை இதுவரை இல்லாத அளவில் ரூ.1,02,252 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு துறைகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இத்தகைய நெருக்கடியான நிலையிலும் வங்கித் துறை வரலாறு காணாத லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் வங்கித் துறை ரூ.5,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. ஆனால், கரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1,02,252 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
முன்னணி வங்கிகளான ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ இரண்டின் லாபம் மட்டுமே மொத்த வங்கித் துறையின் லாபத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆகும். பொதுத்துறை வங்கிகள் கரோனா காலத்தில் கடன் வழங்குவதை வெகுவாகக் குறைத்ததால் தனியார் வங்கிகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.31,817 கோடியும், தனியார் வங்கிகளின் லாபம் ரூ.70,435 கோடியும் ஆகும். இதில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் லாபம் ரூ.31,116 கோடி ஆகும். முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 18% வளர்ச்சி கண்டுள்ளது.
இதுபோல எஸ்பிஐ ரூ.20,410 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அடுத்தபடியாக ஐசிஐசிஐ வங்கி ரூ.16,192 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு வளர்ச்சி ஆகும். 12 பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் மட்டுமே நஷ்டம் அடைந்துள்ளன.
தனியார் வங்கிகளில் யெஸ் வங்கி மட்டும் ரூ.3,642 நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. நஷ்டத்தைச் சந்தித்துள்ள வங்கிகளும் முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் இந்த நிதி ஆண்டில் கண்டுள்ள நஷ்டம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
