

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜம்முகாஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் வளர்ந்த முற்போக்கான காஷ்மீரை உருவாக்குவதற்கான மிக முக்கிய நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எங்களின் முக்கியப் பணி. அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தொகுதி மறுவரையறைப் பணிகள் வேகமாக செய்யப்பட்ட வேண்டும். தேர்தல் நடந்து மக்களாட்சி அமைந்தால் தான் அங்கு வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே, எதிர்க்கட்சியினருடனும் கூட எதிரெதிரே அமர்ந்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசக்கூடிய சூழல் இருப்பதே.
ஜம்மு காஷ்மீரை வளமானதாக்க அங்குள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உதவ வேண்டும். அங்கு நிலையான மக்களாட்சி அமைந்தால் தான் இளைஞர்களின் கனவு மெய்ப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.