டெல்லியின் பாபா கா தாபா உணவகம் மூடல்: மீண்டும் சாலையோர உணவகத்துக்குத் திரும்பிய முதியவர்

டெல்லியின் பாபா கா தாபா உணவகம் மூடல்: மீண்டும் சாலையோர உணவகத்துக்குத் திரும்பிய முதியவர்
Updated on
1 min read

டெல்லியில் இருந்த பாபா கா தாபா முதியவரின் புதிய உணவகம் வருமான இழப்பு காரணமாக மூடப்பட்டது. மீண்டும் தனது சாலையோர உணவகத்துக்கே அந்த முதியவர் திரும்பியுள்ளார்.

டெல்லி மாளவியா நகரில் வசிப்பவர் 80 வயது முதியவர் காந்தா பிரசாத், 'பாபா கா தாபா' என்ற பெயரில் தகரக் கொட்டகையில் சிறிய உணவகம் நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவி பதாமி தேவியும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர். கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் இவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வருமானம் இல்லாத நிலையில் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து உணவகம் நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி அன்று கவுரவ் வாசன் என்ற தன்னார்வச் செய்தியாளர், முதியவர் காந்தா பிரசாத்தின் உணவகத்துக்குச் சென்றார். சுவையான உணவு வகைகள், பிரபல ஓட்டல்கள் குறித்த செய்திகளைத் திரட்டி சமூக வலைதளங்களில் வெளியிடும் அவர், காந்தா பிரசாத் நடத்தி வரும் 'பாபா கா தாபா' உணவு வகைகள் குறித்துக் கேட்டறிந்தார். அவை குறித்து முழுமையாக வீடியோவில் பதிவு செய்து அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.

வீடியோவில் முதியவர் காந்தா பிரசாத்தின் அழுகையைக் கண்ட டெல்லி மக்கள் திரண்டு சென்று அவருக்கு ஆதரவு அளித்தனர். மேலும், கவுரவ் மூலமாகப் பலரும் நிதி அனுப்ப ஆரம்பித்தனர். இதை வைத்து அந்த முதியவர் புதிதாக ஒரு உணவகத்தையே ஆரம்பித்தார். மேலும், தனக்கு அனுப்பப்பட்ட பணம் தன்னிடம் முழுதாக வந்து சேரவில்லை என்று கவுரவ் மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்த சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் முதியவர் பிரசாத் புதிதாகத் தொடங்கிய உணவகமும் கரோனா நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளானது. சாப்பிடுவதற்குக் குறைந்த வாடிக்கையாளர்களே வந்த நிலையில் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டு வந்தார். தற்போது இந்தப் புதிய உணவகத்தை மூடிவிட்டு மீண்டும் தனது பழைய சாலையோர உணவகத்துக்கே வந்துவிட்டார்.

"1 லட்சம் முதலீடு செய்து 35 ஆயிரம் ரூபாயை மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அதனால் மூடிவிட்டோம். பழைய கடையை நடத்துவதே சந்தோஷமாக இருக்கிறது. இங்கு பலர் வருகின்றனர். நான் சாகும்வரை இந்தக் கடையை நடத்துவேன். இந்த வியாபாரம் பாதிக்கப்படும்போது இதை மூடிவிடுவேன். கடந்த வருடம் எங்களுக்குக் கிடைத்த நிதியை வைத்து எனக்கும், என் மனைவிக்கும் சேர்த்து ரூ.20 லட்சத்தை சேமித்து வைத்திருக்கிறேன்" என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in