பேச்சுவார்த்தைக்கு  தயார்; வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: நரேந்திர சிங் தோமர்

பேச்சுவார்த்தைக்கு  தயார்; வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: நரேந்திர சிங் தோமர்
Updated on
2 min read

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர மற்ற பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு, விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதியே முடங்கியது.

இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு சார்பில் பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவையனைத்தும் தோல்வியில் முடிந்தன.

புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகள் கூறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த மாற்ற மும் இருக்காது, விவசாய மண்டிகள் அகற்றப்பட மாட்டாது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அரசு முன்மொழிந்தது.

ஆனால், புதிய வேளாண் சட்டங் களை அடியோடு நீக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் விவ சாயிகள் உறுதியாக இருந்ததால், இந்தப் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

இதனிடையே கரோனா பரவல் மார்ச் மாதம் அதிகரித்தை தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் விவசாயிகள் தங்கள் வீடுகள், பகுதிகளில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது. அதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதில் மாற்றங்களும் செய்யப்பட்டு விட்டன.

இப்போது கூட விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம் புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறும் கோரிக்கையை ஏற்க முடியாது. அதுதவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்கலாம். மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in