மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தில் குடும்ப ஓய்வூதியம்: அனைத்து துறைத் தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தில் குடும்ப ஓய்வூதியம்: அனைத்து துறைத் தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஒய்வூதியமானது, அவர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைத்தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால், மத்திய அரசு ஊழியர்கள் பலர் உயிரிழந்தனர். பல நேரங்களில், உயிரிழந்த ஊழியரை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருந்து வந்துள்ளது. இந்த நேரத்தில் வாழ்வாதாரத்துக்காக அந்த குடும்பங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

எனவே, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் விரைந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசின் அனைத்து துறைகளும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசு விண்ணப்பித்ததும், அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

பின்னா் அங்கிருந்து, குடும்ப வாரிசுகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாதத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு உயிரிழந்த அரசு ஊழியர்களின் விவரம், அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்ட நாள்,தாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணம், தாமதத்தை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் போன்றவற்றை அரசின் அனைத்து துறைகளும் சமா்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in