லடாக் எல்லையில் நிலவும் கடும் குளிரால் 90% சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம்

கல்வான் பள்ளத்தாக்கு.(கோப்புப் படம்)
கல்வான் பள்ளத்தாக்கு.(கோப்புப் படம்)
Updated on
1 min read

லடாக் எல்லையில் நிலவும் உறைய வைக்கும் குளிரால் 90 சதவீத சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆனால் 50-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்திருப்பதை அமெரிக்க, இந்திய உளவுத் துறைகள் உறுதி செய்தன. சீனாவின் நட்பு நாடான ரஷ்யாவின் முன்னணி ஊடகங்களும் 50-க்கும்மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டன.

போர் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதில் எட்டப்பட்ட உடன்பாட்டின்படி எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் கடந்த ஆண்டு இறுதியில் ஒப்புக் கொண்டன. கடந்த பிப்ரவரியில் சீன படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டன. இந்திய வீரர்களும் தங்களது நிலைக்கு திரும்பினர்.

தற்போது கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய தரப்பில் 50,000 வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல சீன ராணுவம் தனது எல்லையில் 50,000 வீரர்களை குவித்துள்ளது.

லடாக் எல்லையில் பணியமர்த்தப்படும் இந்திய வீரர்கள்2 ஆண்டுகள் அதே பகுதியில் பணியாற்றுகின்றனர். ஆண்டுதோறும் 40 முதல் 50 சதவீத வீரர்கள் மட்டும் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்றனர்.

லடாக் எல்லையில் தற்போது நிலவும் உறைய வைக்கும் குளிரை சீன வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இதன்காரணமாக 90 சதவீத சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மலைப் பகுதியில் பணியாற்றுவது சீன வீரர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதால் சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்நடைபெற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. கடந்த சில மாதங்களாக லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் சில அதிநவீன ஆயுதங்களையும் போர் தளவாடங்களையும் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு இணையாக இந்தியாவும் அதிநவீன ஆயுதங்களை எல்லையில் தயார் நிலையில் வைத்திருக்கிறது.

வரும் அக்டோபர் தொடக்கத்தில்ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன ஏவுகணை லடாக் எல்லையில் நிலை நிறுத்தப்படும். ரஃபேல் போர் விமானங்கள், எஸ்400 ஏவுகணைகள் சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in