

கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல், உள்நாட்டு விமானங்கள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித் துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளதாலும், பயணிகள் வரத்து குறைந்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு கொண்டுவந்தபோது விமானப்போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து, மே 25-ம் தேதி, 33 சதவீத பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி தந்தது. அந்தக் கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்பட்டு, டிசம்பர் மாதத்தில் 80 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வரையில் அந்த கட்டுப்பாடு தொடர்ந்தது. இந்நிலையில் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடு ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். - பிடிஐ