Last Updated : 29 May, 2021 03:11 AM

 

Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் காஞ்சிபுரம் கோயில்கள்: மத்திய அரசின் முயற்சிக்கு இந்தமுறை வெற்றி கிடைக்குமா?

புதுடெல்லி

உலக நாடுகளின் வரலாற்றுச் சின்னங்கள், இயற்கைவளம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து யுனெஸ்கோ நிறுவனம் தனது பட்டியல்களில் வெளியிட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் உலக நாட்டு அரசுகளிடம் அதற்கான சின்னங்களையும், இயற்கை பகுதிகளையும் பெறுகிறது. அவற்றில் உகந்தவற்றை தனது தோராயப் பட்டியலில் யுனெஸ்கோ சேர்க்கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு, மத்திய அரசு சார்பில் இந்திய தொல்பொருள் ஆய்வகம், யுனெஸ்கோவின் தோராயப் பட்டியலுக்காக9 இடங்களை பரிந்துரைத்திருந்தது. இதில் 6 இடங்களை மட்டும் தன்தோராயப் பட்டியலில் யுனெஸ்கோசேர்த்துள்ளது. அவற்றில் ஒன்றாக பழம்பெரும் நகரமாகக் கருதப்படும் தமிழகத்தின் காஞ்சிபுரக் கோயில்கள் இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ளதில் உத்தரபிரதேசம் வாரணாசியின் கங்கை கரையின் முன் பகுதி, கர்நாடகாவின் ஹிராபெங்காய் கல்லறை பகுதி, மகாராஷ்டிராவின் மராட்டிய ராணுவத்தின் கட்டிட அமைப்புகள், மத்தியப்பிரதேசத்தின் சத்புரா புலிகள் சரணாலயம் மற்றும் ஜபல்பூரின் நர்மதா நதியின் பேடா மற்றும்லேம்தா கரைகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. இவற்றில் காஞ்சிபுரக் கோயில்கள் இந்தமுறையாவது யுனெஸ்கோவால் தேர்வாகுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் முனைவர்.டி.தயாளன் கூறும்போது, ‘தனது பல்வேறு குழுக்களை அனுப்பி யுனெஸ்கோ பல முறை ஆய்வு செய்யும். இதில், சர்வதேச ஆய்வாளர்களாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். ஆய்வு செய்ய உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் இக்குழுக்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.இக்குழுவினருக்கு மத்திய, மாநில தொல்பொருள் மற்றும் வரலாற்றாளர்கள் காஞ்சி கோயில்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது முக்கியம்’’ என்று தெரிவித்தார்.

காஞ்சியின் சிறப்பு

காஞ்சி நகரத்தின் குறிப்புகள், கி.மு. 2 மற்றும் 3-ம் நூற்றாண்டுகளின் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலும் பதஞ்சலியின் மஹாபாஷ்யா எனும் சமஸ்கிருத இலக்கியங்களிலும் உள்ளன. புத்தம்,ஜைனம், சைவம் மற்றும் வைணவமதங்கள் காஞ்சியில் செழித்தோங்கின. கடைசி இரண்டின் கால கட்டங்களில் உருவானதாகக் கருதப்படுவதன் 11 கோயில்கள் காஞ்சியில் பழம்பெருமை வாய்ந்ததாக உள்ளன. இவை தான் யுனெஸ்கோவின் தோராயப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

யுனெஸ்கோவின் பலன்

யுனெஸ்கோவின் பாரம்பரியச்சின்னங்களாக அறிவிக்கப்படுவதால் அவை சர்வதேச அங்கீகாரம்பெற்று உலக அளவில் விழிப்புணர்வு பெறுகின்றன. இதன் பிறகுஅதன் பலனுக்காக யுனெஸ்கோவின் தொழில்நுட்ப உதவிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இதனால், அவை உலகினர் கவனத்தில் சுற்றுலா பகுதியாக வளர்ச்சி பெறுவதுடன் அதன் மீதான ஆய்வுகளும் யுனெஸ்கோவால் விரிவாக்கப்பட்டு நிதியும் அளிக்கிறது. எனினும், இந்தியக் கலாச்சாரத்தை காக்க வெளிநாடுகளிலிருந்து நிதியை மட்டும் பெறக் கூடாது என சில ஆண்டுகளுக்கு முன்மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வான சின்னங்கள்

இந்தியாவில் 38 இடங்கள் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் சோழர்களின் கோயில்களான கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தஞ்சாவூரின் பிரகதீஸ்வரர், தாராசுரத்தின் அறிவட்டேஸ்வரர் ஆகிய மூன்று உள்ளன. இயற்கைப் பகுதிகளில் ஊட்டியின் ரயில் பாதை மற்றும் மலைத்தொடர் என இரண்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x