

2016ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு வழங்கி வரும் நிதி உதவி நிறுத்தப்படுகிறது. 2012ல் பிரிட்டன் எடுத்த முடிவின்படி இந்த நிதி நிறுத்தம் அமலாகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் சூழலை கருத்தில்கொண்டும் இங்கிலாந்து மக்கள் பெரும்பாலானோர், ஆசியாவிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருப்பதை சுட்டிக்காட்டி நிதி உதவியை நிறுத்த ஆலோசனை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து 2012ல் பிரிட்டன் எடுத்த முடிவின்படி, இந்த நிதி நிறுத்தம் அமலாகிறது. நிதி உதவிக்கு பதிலாக இந்தியாவுக்கு தொழிநுட்ப உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் அரசு பல்வேறு நாடுகளுக்கு அளிக்கும் நிதி உதவிகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிதியின் பெரும் தொகையை பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பயன்படுத்த உள்ளதாக அந்நாடு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசுக்கு 2013 முதல் வளர்ச்சி திட்டங்களுக்காக முதல் ஆண்டில் ரூ.855 கோடியும் அடுத்த ஆண்டில் சுமார் ரூ. 600 கோடியும் 2014இல் 190.06 கோடியையும் நிதி உதவியாக பிரிட்டன் அளித்தது.
பிரிட்டனின் நிதி நிறுத்தும் திட்டம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் கருத்து கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரிட்டனின் நிதி நிறுத்தபடுவதால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது என்று கூறியிருந்தார்.
2012-ல் பிரிட்டன் அரசு இந்த முடிவை எடுத்தபோது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, "வளர்ச்சி திட்டங்களுக்காக இந்தியா செலவிடும் நிதியில் பிரிட்டன் அளிக்கும் பங்கு சிறிய அளவிலானது தான். அந்த தொகை இல்லாமலே இந்தியாவின் திட்டங்கள் இயங்கும்" என்றார்.