

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால் வரும் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரலில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் குறையாததால், மீண்டும் மே 24-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
எனினும் தினமும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று பதிவாகிறது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடியூரப்பா அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கரோனா தடுப்பு நிபுணர் குழு உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதேபோல எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று எடியூரப்பா, “கர்நாடகாவில் இருமுறை ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட போதும் கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தொற்றை கட்டுப் படுத்த வேறு வழி இல்லாததால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப் பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 7ம் தேதிவரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கருப்பு பூஞ்சை தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்'' என தெரிவித்தார்.
548 பேர் பலி
இந்நிலையில் வியாழக்கிழமை கர்நாடகாவில் 28 ஆயிரத்து 869 பேருக்கு தொற்று கண்டறிப்பட்ட நிலையில், 548 பேர் உயிரிழந்தனர். தொற்றின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில் ஒரே நாளில் 548 பேர் உயிரிழந்ததால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 32 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 353 ஆக குறைந்துள்ளது.