மகாராஷ்டிராவில் நடந்த என்கவுன்ட்டரில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிராவில் நடந்த என்கவுன்ட்டரில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் நேற்று 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியில் கட்சிரோலி மாவட்டம்அமைந்துள்ளது. இது வனப்பகுதி நிறைந்த மாவட்டமாகும். சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. இதன்காரணமாக கட்சிரோலி மாவட்டத்தில் நீண்டகாலமாக மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடிக்கிறது.

கடந்த 1990-ம் ஆண்டில்மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்க மாநில காவல் துறை சார்பில் சி-60 கமாண்டோ படை அமைக்கப்பட்டது. கடந்த 2019 மே மாதம்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீஸார் உயிரிழந்தனர். இதன்பிறகு கடந்த ஏப்ரல் 23-ம்தேதி கட்சிரோலி மாவட்டம் கட்டா போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பெமிலி மெட்பள்ளி பகுதியில் 6 லாரிகளை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர்.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்தஏப்ரல் 28-ம் தேதி கட்சிரோலி மாவட்டத்தில் சி-60 கமாண்டோ படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கட்சிரோலி மாவட்டத்தின் காதிமா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை நேற்று அதிகாலை சி-60 கமாண்டோ வீரர்கள் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே ஒன்றரை மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இறுதியில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் பெண்கள் ஆவர்.

எஸ்.பி. தகவல்

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அன்கிட் கோயல் கூறும்போது, "சுமார் 70 தீவிரவாதிகள் ஒருமலை உச்சியில் பதுங்கியிருந்தனர். அவர்களை 4 கமாண்டோ படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின.

இதில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகிறோம். போலீஸ் தரப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in