ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
Updated on
1 min read

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் சாமானிய பக்தர்கள் முதல் விஐபி பக்தர்கள்வரை பலருக்கு ‘திருநாமம்’ இட்டு, அவர்கள் தரும் அன்பளிப்பு மூலம் வாழ்க்கை நடத்திவந்தவர் ஸ்ரீநிவாசன். இவர் தேவஸ்தான தற்காலிக ஊழியருக்கான பணிகளையும் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் திருப்பதி - கரகம்பாடி சாலையில் மங்களம் அருகே உள்ள சேஷாசலம் நகரில்தற்காலிக ஊழியர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தானம் வீடு கட்டிக்கொடுத்தது. இதில் ஸ்ரீநிவாசனுக்கும் ஒரு வீடு தரப்பட்டது. இதில் தனியாக வசித்து வந்த ஸ்ரீநிவாசன், கடந்தஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன் தனது வீட்டை தேவஸ்தானத்திற்கு திரும்ப வழங்குவதாக உயிலில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீநிவாசன் இறந்ததும் சிலர் அந்த வீட்டை கைப்பற்றி விற்க முயன்றனர். இதை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் நேற்று முன்தினம் ஸ்ரீநிவாசனின் வீட்டுக்குச் சென்று, பூட்டை உடைத்து உள்ளேசென்றனர். அங்கு ஒரு பையில் கட்டுக்கட்டாக பணமும் ஒரு மூட்டையில் நாணயங்களும் இருந்ததை கண்டு வியப்படைந்தனர்.

இதனை கைப்பற்றிய அதிகாரிகள் நேற்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி தலைமையில் பணத்தை எண்ணினர். இதில் ரூ.6 லட்சத்து 15,050 ரொக்கம் மற்றும் 25 கிலோ நாணயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேவஸ்தான கருவூலத்தில் செலுத்தினர். ஸ்ரீநிவாசன் வசித்த வீடும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in