கங்கையில் மிதந்த உடல்கள்: மத்திய அரசு, உ.பி., பிஹார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

பிஹார், உத்தரப்பிரதேசத்தில் பாய்ந்தோடும் கங்கை ஆற்றில் சமீபத்தில் ஏராளமான சடலங்கள் மிதந்த சம்பவத்தையடுத்து, பிஹார், உத்தரப்பிரதேசம், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிைமகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

கடந்த வாரத்தில் பிஹாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கங்கை ஆற்றில் 70-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. இது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா, பாராவுளி பகுதியிலும் 50க்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்தன.

இந்த உடல்களை இரு மாநிலங்களின் அதிகாரிகளும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர். உத்தரப்பிரதேசம் வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களில் இருந்து இந்த உடல்கள் வந்திருக்கலாம் என்று பிஹார் அதிகாரிகள் சந்தேகித்தனர், அது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்தது தொடர்பாக பிஹார், உ.பி. மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

அதில் “ புனிதமான கங்கை நதியில் பாதி எரிந்த நிலையில் உடல்களையும், மிகமோசமான நிலையில் உள்ள சடலங்களையும் தள்ளிவிடுவதைத் தடுக்கவும், மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிஹார், உ.பி. அரசுகள் தவறிவிட்டன.

புனிதமான நமது கங்கை நதியில் இதுபோன்ற மனித உடல்களை மிதக்கவிடுவது கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் திட்டத்துக்கும், விதிமுறைகளுக்கும் எதிரானது. கடந்த 11-ம் தேதி இதுதொடர்பாக பல புகார்கள் வந்தன, நாங்களும் ஊடகங்கள் வழியாக தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தோம்.

கங்கை நதியில் கூட்டமாக உடல்கள் மிந்தது எங்களுக்க ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. கங்கை நிதியில் இதுபோன்று மனித சடலங்களை தூக்கிவீசுவது நதியை மட்டுமல்ல, சக மனிதர்களையும் கடுமையாகப் பாதிக்கும். இந்த உடல்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டவையா என்பது தெரியவில்லை.

இதுபோன்ற பழக்கம், செயல்கள் சமூகத்துக்கு அவமானகரமானது. உயிரிழந்தவர்களின் கடைசிக்கால கண்ணியத்தை மீறும் செயல், மனித உரிமைள் மீறலாகும். இந்த சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து. அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in