Last Updated : 10 May, 2021 04:11 PM

 

Published : 10 May 2021 04:11 PM
Last Updated : 10 May 2021 04:11 PM

நிதர்சனத்தை, உண்மையை எதிர்கொள்ளாவிட்டால், சரியான படிப்பினைகளை பெற முடியாது: தேர்தல் தோல்வி குறித்து சோனியா காந்தி அறிவுரை

நாம் யதார்த்தத்தை எதிர்கொள்ளாவிட்டால், உண்மைகளை நேருக்கு நேர் சந்திக்காவிட்டால், சரியான படிப்பினைகளை பெற முடியாது என்று தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவி்த்தார்.

சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மிக மோசமாகச் செயல்பட்டது. கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் கோட்டைவிட்டது. அசாம் மாநிலத்திலும் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. புதுச்சேரியில் ஆட்சியை காங்கிரஸ் இழந்தது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைந்து தேர்தலைச் சந்தித்து மிகப்பெரிய தோல்வியைப் பெற்றது.

இந்தத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக்கூட்டம் இன்று கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சோனியாகாந்தி பேசியதாவது:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் என்பது, காங்கிரஸ் கட்சி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

தேர்தல் முடிவுகள் வேதனை தருகிறது என்று கூறுவது மிகவும் சிறிய வார்த்தை. இந்த தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய சிறிய குழு அமைக்கப்படும். கேரளாவிலும், அசாமிலும் எவ்வாறு தோல்வி அடைந்தோம் என்பதையும், மே.வங்கத்தில் மொத்தமாக தோல்வி அடைந்தோம் என்பதையும் நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு அசவுகரியமான பாடகங்களை புகட்டியுள்ளது. ஆனால், நாம் யதார்தத்தை, உண்மைகளை நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தால், நாம் சரியான படிப்பினைகளை பெற முடியாது.

அசாம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங், கேரள பொதுச்செயலாளர் தாரிக் அன்வர், மே.வங்க பொறுப்பாளர் ஜிதின் பிரசாதா ஆகியோர் தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த மாநிலங்களில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் இவர்கள் மூவரும் விளக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைவிட மிகமோசமாக செயல்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து எங்களிடம் தெரிவிக்க வேண்டும். நாம் கட்சியை முன்னேற்ற வேண்டும் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்த முடிவுகள் தெளிவாக உணர்த்துகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து காரியக் கமிட்டி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுசூதன் மிஸ்திரி செய்துள்ளார்.

மருத்துவ வல்லுநர்கள் கரோனா 2-வது அலை வரும் என எச்சரிக்கை விடுத்தும் மோடி அரசு அதைப் புறக்கணித்து, மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது. மோடி அரசின் கவனக்குறைவால் இந்த தேசம் மோசமான விலை கொடுத்து வருகிறது.

உண்மையில் வேண்டுமென்றே, கரோனாவை பரப்பும் பல நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு அனுமதித்தது. இந்த 2-வது அலை நம்மை மூழ்கடிக்கும் நிலையில் இருக்கிறது. இதைவிட 3-வது அலை மோசமாக இருக்கும் என பல விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சில மாநிலங்கள் ஏற்கெனவே லாக்டவுன் அறிவித்துள்ளன. நாடுமுழுவதும் பொதுசுகாதாரம் சீர்குலைந்துவிட்டது.

இவ்வாறு சோனியாா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x