

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4.03 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 4,092 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37 லட்சத்து 36 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 16.76 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து ஒரு கோடியே 83 லட்சத்து 17 ஆயிரத்து 404 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைவோர் சதவீதம் 82.15 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிேநரத்தில் கரோனாவிலிருந்து 3 லட்சத்து 86 ஆயிரத்து 444 பேர் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4 ஆயிரத்து 92 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 864 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 482 பேரும், டெல்லியில் 332 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 297 பேரும், தமிழகத்தில் 241 பேரும், சத்தீஸ்கரில் 223 பேரும், பஞ்சாப்பில் 171 பேரும், ராஜஸ்தானில் 160 பேரும், ஹரியானாவில் 155 பேரும், ஜார்க்கண்டில் 141 பேரும், மேற்கு வங்கத்தில் 127 பேரும், குஜராத்தில் 119 பேரும், உத்தரகாண்டில் 118 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 30 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 471 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18லட்சத்து 65 ஆயிரத்து 428மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.