தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்
Updated on
1 min read

கடந்த 2012 டிசம்பரில், டெல்லியின் அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சீத் வீட்டுக்கு எதிரில், 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய வழக்கில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கேஜ்ரிவால், குமார் விஸ்வாஸ், வாசிம், மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களில் கேஜ்ரிவால், விஸ்வாஸ், வாசிம் ஆகியோர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். மூவரும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஜாமீன் பத்திரம் வழங்கியதைத் தொடர்ந்து மூவருக்கும் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் தீரஜ் மிட்டல் உத்தரவிட்டார்.

விசாரணையின் போது மூவருக்கும் குற்றப்பத்திரிகை மற்றும் பிற ஆவணங்களின் நகல்கள் வழங்கப்பட்டன. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in