கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்க வேண்டும்: 3 மாநிலங்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்க வேண்டும்: 3 மாநிலங்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த ஆண்டைப் போல ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என 3 மாநில அரசுகள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்,அனைத்து வாகனப் போக்குவரத்தும் முடங்கியது. தொழிற் சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கூலித் தொழிலாளர்கள் உணவுக்கு வழியின்றி தவித் தனர்.

இதையடுத்து, மத்திய அரசு பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, நியாய விலைக் கடைகள் மூலம் ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த சூழலில் கடந்த ஆண்டைப் போல ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தராகண்ட், கேரளா ஆகிய 3 மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இதுபோல, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பினோய் விஸ்வம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய உணவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே கூறும்போது, “3 மாநில அரசுகள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இப்போதைய நிலைமைக்கேற்ப மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in