பாலியல் தொந்தரவு செய்தவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராக்கி கட்டினால் ஜாமீன்: ம.பி. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணுக்கு ராக்கி கயிறு கட்டினால் ஜாமீன் பெறலாம் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ஆர்யா முன் பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் ஜாமீன் கோரி விண்ணப்பம் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

அதில், "புகார் அளித்த பெண்ணின் வீட்டுக்குக் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரின் மனைவியும் சென்று, புகார் கூறிய பெண்ணின் கையில் குற்றம் சாட்டப்பட்டவர் ராக்கி கயிறு கட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.11 ஆயிரத்தைச் சகோதரன் சகோதரிக்குப் பரிசாக அளிப்பதுபோல் அளிக்க வேண்டும். புகார் கூறிய பெண்ணின் மகனுக்கு உடைகள், இனிப்புகள் வழங்க ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்" எனத் தீர்ப்பளித்திருந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபர்னா பாட் உள்ளிட்ட 9 பெண் வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அதில், "பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று குற்றம் சாட்டப்பட்ட நபரை ராக்கி கட்டக் கூறி, அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தை அவமானப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரவிந்திரபாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தில் தனது கருத்தையும், கண்ணோட்டத்தையும் தெரிவிக்கக் கூறியிருந்தது. அட்டர்னி ஜெனரலும் தனது ஆலோசனைகளையும், கருத்தையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக அளித்திருந்தார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரவிந்திரபாட் இன்று தீர்ப்பளித்தனர். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாமல் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவதில் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

அதன்படி, நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சந்திப்பு ரீதியான தொடர்பு இருக்கக் கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர், ஜாமீனில் வெளியே செல்லும்போது, பாதிக்கப்பட்டவரை எந்தவிதமான தொந்தரவும் செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் நீதிமன்றம் ஈடுபடக் கூடாது என பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளையும் வழங்கித் தீர்ப்பளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in