

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் பி.சி.சாக்கோ சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில், 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், நேர்மையான காங்கிரஸ்காரனாக இருப்பது கடினம் எனவும் கூறி, அக்கட்சியின் மூத்த தலைவரும் திருச்சூர் முன்னாள் எம்.பி.யுமான பி.சி.சாக்கோ கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அவர் பாஜகவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார். ‘‘நான் பாஜகவில் இணையலாம் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. என்னால் ஒருபோதும் மதச்சாயல் கொண்ட கட்சியில் இணைய முடியாது. நான் காங்கிரஸ்காரணாக இருந்ததற்கே கட்சியின் மதச்சார்பின்மைதான் காரணம்’’ என அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் பி.சி.சாக்கோ சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை விரைவில் சந்திக்கவுள்ளேன். அதுமட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேசுகிறேன்.
இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போதைய சூழலில் கேரள தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவேனா என்பது பற்றி சரத் பவாரை சந்தித்து பேசிய பிறகே முடிவெடுக்க முடியும்’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் பி.சி.சாக்கோ தங்கள் கட்சியில் இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.