கேஜ்ரிவால் நஜீப் ஜங் இடையிலான மோதல்: டெல்லி அரசுப் பணியில் இருந்து வெளியேற விரும்பும் ஐஏஎஸ் அதிகாரிகள்

கேஜ்ரிவால் நஜீப் ஜங் இடையிலான மோதல்: டெல்லி அரசுப் பணியில் இருந்து வெளியேற விரும்பும் ஐஏஎஸ் அதிகாரிகள்
Updated on
1 min read

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்தது முதல் அதன் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் இடையே மோதல் நிலவுகிறது. இவர்களுக்கு இடையே பணியாற்றுவதில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதால் அங்கிருந்து வெளியேறி மத்திய அரசு அல்லது வேறு மாநிலப் பணிகளுக்குச் செல்ல அவர்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது

டெல்லியில் யூனியன் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியாற்று கின்றனர். இவர்களில் சுமார் இரு டஜன் அதிகாரிகள், கேஜ்ரிவால் பதவியேற்ற பின் வேறு மாநிலப் பணிகள் வாங்கிச் சென்று விட்டனர்.

இவர்களை போல தாங்களும் செல்ல, மேலும் சுமார் அரை டஜன் அதிகாரிகள் மத்திய அரசிடம் மனுச் செய்து காத்திருக்கின்றனர். இதற்கு, டெல்லி முதல்வர் - துணைநிலை ஆளுநர் இடையிலான மோதல் உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இது குறித்து டெல்லி மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஆளுநர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்ப வேண்டாம் என அமைச்சர்கள் உத்தரவிடுகின்றனர். இதில் பலவற்றை ஆளுநர் ரத்து செய்து விடுகிறார். இந்தப் பிரச்சினையை டெல்லியின் தலைமைச் செயலாளராலும் தீர்க்க முடியவில்லை. மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கால் நாங்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடிவதில்லை” என்றார்.

முதல்வர் அலுவலகம் மற்றும் ஆளுநர் மாளிகை சார்பில் உயரதிகாரிகளை புதிய பதவிகளில் அமர்த்துவதும், இடமாற்றம் செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்தப் பிரச்சினையால் சில அதிகாரிகளின் அறைகளுக்கு சீல் வைக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் டெல்லியின் உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு உயரதிகாரிகள் நியமிக் கப்பட்டிருந்தனர். ஒருவர் முதல்வராலும் மற்றொருவர் ஆளுநராலும் நியமிக்கப்பட்டனர். இருவரும் தனித்தனி அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றி வந்தனர்.

இதுபோன்ற காரணங்களால், டெல்லி மாநிலத்தின் செயல்பாடுகளும் அன்றாடம் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக் கப்படும்போது, அவர்களிடம் உயரதிகாரிகள் நேரடியாக பதில் சொல்ல வேண்டியக் கட்டாயமும் ஏற்படுகிறது. இந்த சூழலை தவிர்க்க வேண்டியும் பல உயரதிகாரிகள் தற்காலிகமாக மத்திய அரசுப் பணிகளை கேட்டுப் பெறும் நிலை டெல்லியில் உருவாகி விட்டது.

டெல்லியில் யூனியன் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் இரு டஜன் அதிகாரிகள், கேஜ்ரிவால் பதவியேற்ற பின் வேறு மாநிலப் பணி வாங்கிச் சென்று விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in