பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. மாநிலங்களவை நேற்று காலை கூடியது. கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட இருந்தது.

அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மைப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி நிலவியது. காங்கிரஸ் எம்.பி,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினையை தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளி தொடர்ந்தது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதுபோலவே மக்களவையிலும் இன்று காலை முதல் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலையை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவையும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் அவை கூடியதும் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in