

பெட்ரோல், டீசல் விலை குளிர்காலம் முடிந்ததும் குறையும் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுள்ளது. சில நகரங்களில் ரூ.100-ஐயும் தாண்டிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘’சர்வதேச சந்தையில் பெட்ரோலியத்தின் விலை உயர்வு வாடிக்கையாளர்களையும் பாதித்துள்ளது.
குளிர்காலம் முடியும் தருவாயில் இருப்பதால் எரிபொருட்களின் விலை சிறிதளவு குறையும். இது ஒரு சர்வதேச விவகாரம். தேவை அதிகரித்திருப்பதால் விலையும் உயர்ந்துள்ளது. இது குளிர்காலங்களில் நடப்பதுதான். இந்தப் பருவ காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறையும்.
நாட்டில் முதன்முதலாக எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அசாமில்தான். நாட்டின் 18 சதவீத எண்ணெய் வளங்கள் வட கிழக்குப் பகுதிகளில்தான் இருக்கின்றன.
அசாம், அருணாச்சல், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா ஆகியவை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த பகுதிகளாக உள்ளன. 2014-ம் ஆண்டில் மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு, எரிவாயு குழாய் இணைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பை உருவாக்கி, சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவு செய்தோம்’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.