

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் திணறி சரிந்ததால் உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கி பிடித்துக் கொண்டே சென்றனர்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக போராட்டத்துக்கு மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தலைமைச் செயலகத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றார். அவரது பாதுகாப்பு அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
அப்போது மம்தா பானர்ஜி ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் திணறி கீழே விழுந்தார். அப்போது அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு அவர் ஸ்கூட்டர் கீழே விழுந்து விடாதபடி அதிகாரிகள் தாங்கி பிடித்துக் கொண்டே உடன் சென்றனர்.
அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி அரசின் செயல்பாடு இது தான். மக்களவை வஞ்சிக்கும் அரசு இது. மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது பிரதமர் மோடி.
மத்திய அரசு நாட்டின் முக்கிய அரசு நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்பனை செய்கிறார்கள். நிலக்கரி சுரங்கங்களை விற்பனை செய்கிறார்கள். கோல் இந்தியா நிறுவனத்தையும் தானியாருக்கு தாரை வார்க்கிறார்கள்.
நாட்டில் எல்லாவற்றையும் விற்பனை செய்கிறார்கள். மோடியும், அமித் ஷாவும் இணைந்து நாட்டையே விற்கிறார்கள். இந்த அரசு இளைஞர்களுக்கு எதிரானது. விவசாயிகளுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது. இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.