

ஒடிசாவில் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வோருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகள் சமூக பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் துறையின் ஆணையர் பாஸ்கர் சர்மா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக துறையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எனவே, இந்த ஊக்கத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆணோ, பெண்ணோ தம்பதியில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். அதேநேரம், திருமண நாளில் மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும் வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்து கொள்வோருக்கு மட்டும் இந்த தொகை வழங்கப்படும். தம்பதி இருவருமே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.