கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வியறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றனர்: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் 96 வயதில் கல்வியறிவு பெற்ற கார்த்தியாயினி அம்மாள் : படம் உதவி ட்விட்டர்
கேரளாவில் 96 வயதில் கல்வியறிவு பெற்ற கார்த்தியாயினி அம்மாள் : படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

கேரள மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வி அறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளில், 2016 முதல் 2020ம் ஆண்டுவரை தான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

பழங்குடியின மக்கள் தவிர்த்து, மீனவ மக்கள், புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கும் எழுத்தறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் தங்கள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியிருந்தனர், அவர்களும் கல்வியைத் தொடரவும் வாய்ப்பும், வசதியும் வழங்கப்பட்டது.

கேரள அரசின் மாநிலக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுயேட்சை அமைப்பான கேரள எழுத்தறிவு இயக்க ஆணையம்(கேஎஸ்எல்எம்ஏ) பல்வேறு எழுத்தறிவு திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது.

கேரள எழுத்தறிவு ஆணையத்தின் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாகப் பெண்கள் உள்பட ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 608 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் 4-ம் வகுப்பு வரை 24,148 பேரும், 7-ம் வகுப்புவரை 21,950 பேரும், 10ம் வகுப்பு வரை 64,663 பேரும், 12-ம் வகுப்பு வரை 24,847 பேரும் கல்வி கற்றுள்ளனர்.

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் மொத்தமாக 4 ஆயிரத்து 600 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். ஆனால், ஐக்கிய இடது ஜனநாயக அரசின் கீழ் 1.38 லட்சம் பேர் புதிதாக எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கேரள எழுத்தறிவு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் " கடந்த 1990களில் எழுத்தறிவு இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் கேரள அரசு தொடக்கநிலைக் கல்விக்கே அதிகமான முக்கியத்துவம் அளித்து, கல்வியறிவு இல்லாத சூழலைக் கொண்டுவர முயன்றது. ஆனால்,கடந்த 4 ஆண்டுகளாக இடதுசாரி அரசுதான் ஒட்டுமொத்த கல்விக்கான முக்கியத்துவத்தை அளித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

கேரள அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்படி, 2011-ம் ஆண்டு கணக்கின்படி மாநிலத்தில் 18 லட்சம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

கேரளாவில் 4-ம் வகுப்பு தேறிய 105 வயது மூதாட்டி பகீரதிஅம்மாளுடன் ஸ்ரீகலா
கேரளாவில் 4-ம் வகுப்பு தேறிய 105 வயது மூதாட்டி பகீரதிஅம்மாளுடன் ஸ்ரீகலா

கேஎஸ்எல்எம்ஏ இயக்குநர் பிஎஸ். ஸ்ரீகலா கூறுகையில் " பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், மீனவ மக்கள், விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் மக்கள்ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்புத் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியதன் காரணமாகவே கல்வியறிவிலும், கல்வித்துறையிலும் இந்த சாதனைகளைச் செய்ய முடிந்தது.

வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் அட்டபாடி பகுதிகளில் கல்வியறிவு போதிக்கச் செய்யப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் 12,968 பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த பகுதிதான் மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. அக்ஸராசகரம் திட்டத்தின் கீழ் 11,941 பேரும், சங்கதி திட்டத்தின் கீழ் 5,400 மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளரக்ளும்மலையாளம் கற்றுள்ளனர். நவசேதனா திட்டத்தின் கீழ் 3,188 பேர் கல்வி கற்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in